Paper Article - 01
ரமழான் சிந்தனை - 01
அருள்மிகு ரமழானை வரவேற்போம்
2026/02/19
![]() |
| Thinakaran |
முஃமின்களின் இதயங்களில் ஆன்மீக வசந்தத்தை மலரச் செய்யும் புனித ரமழான் மாதம் எம்மை வந்தடைந்திருக்கிறது. இது வெறும் நாட்களின் மாற்றமல்ல; மாறாக வாழ்க்கையை மாற்றி அமைக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். அல்லாஹ் கூறுகிறான்: “ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்களுக்கு விதியாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது; நீங்கள் தக்வா உடையவர்களாக மாறுவதற்கு” (அல்-பகரா: 183). ஆகவே, ரமழான் என்பது பசியைத் தாங்கும் மாதம் மட்டுமல்ல; தக்வாவை வளர்க்கும் ஆன்மீகப் பயிற்சி களம்.
நபி முஹம்மத் ﷺ அவர்கள் கூறினார்கள்: “ரமழான் மாதம் வந்தால் சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும்; நரகத்தின் கதவுகள் மூடப்படும்; ஷைத்தான்கள் விலங்கிடப்படும்” (புகாரி, முஸ்லிம்). இதன் மூலம் இந்த மாதத்தின் மகத்துவம் எவ்வளவு உயர்ந்தது என்பதைக் காணலாம். இத்தகைய அருள் பொழியும் நாட்களை அலட்சியமாக அல்லாமல், மகிழ்ச்சியுடனும் எதிர்பார்ப்புடனும் வரவேற்க வேண்டும்.
மேலும் அல்லாஹ் கூறுகிறான்: “ரமழான் மாதம் மனிதர்களின் வழிகாட்டியான குர்ஆன் அருளப்பட்ட மாதமாகும்” (அல்-பகரா: 185). எனவே, இந்த மாதத்தை அல் குர்ஆனுடன் இணையும் காலமாக மாற்றுவது நமது முதல் பொறுப்பாகும். நோன்பு, தொழுகை, துஆ, சதகா, நல்லொழுக்கம் இவற்றை ஒருங்கிணைத்து நம் உள்ளத்தை சுத்திகரிப்போம்.
ரமழான் நம் கதவைத் தட்டுகிறது. தூய எண்ணம், அல்லாஹ்வின் திருப்பொருத்தம், தக்வா போன்றவற்றை எதிர்பார்த்தவர்களாக ரமழானை வரவேற்போம்.
✍️ அஷ் ஷெய்க் அஸீப் அமீர் (நளீமி)

Comments
Post a Comment