Paper Article - 02
ரமழான் சிந்தனை - 02
நோன்பின் உண்மையான நோக்கம்
2026/02/20
![]() |
| Thinakaran |
நோன்பு என்பது வெறும் பசியையும் தாகத்தையும் தாங்கும் உடலுக்கான பயிற்சி அல்ல. அது மனிதனின் உள்ளத்தை சீரமைக்கும் ஓர் ஆன்மீகப் பயிற்சி. அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்: “ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்களுக்கு விதிக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு விதிக்கப்பட்டுள்ளது; நீங்கள் தக்வா உடையவர்களாக மாறுவதற்கு” (அல்-பகரா: 183). இந்த வசனம் நோன்பின் மைய நோக்கத்தை தெளிவாக எடுத்துரைக்கிறது.
தக்வா என்பது இறைவனை உணர்ந்து வாழும் உணர்வாகும். மனிதன் யாரும் காணாத தருணத்திலும் பாவங்களை தவிர்த்து வாழும் மனப்பக்குவமாகும். நோன்பு இந்த உளகட்டுப்பாட்டை உருவாக்குகிறது. உணவு முன் இருக்கும்போதும் அதைத் தவிர்ந்து கொள்வது, தாகம் இருந்தாலும் பொறுத்துக் கொள்வது அல்லாஹ்வின் கண்காணிப்பை உணர்ந்து கொள்வது போன்றவற்றை குறிப்பிடலாம்.
மேலும், நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “யார் பொய்யுரைத்தலையும் பாவமான செயல்களையும் விட்டுவிடவில்லையோ, அவர் உணவையும், பானத்தையும் தவிர்ந்திரருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை” (புகாரி). இந்த ஹதீஸ் நோன்பின் வெளிப்படையான அம்சத்தை அல்ல, அதன் உள்ளார்ந்த மாற்றத்தை உணர்த்துகிறது.
எனவே, நோன்பின் உண்மை நோக்கம் உடலை மட்டும் கட்டுப்படுத்துவது அல்ல; நாவை, கண்களை, சிந்தனையை, செயல்களை ஒழுங்குபடுத்துவதுமாகும். கோபத்தை அடக்குதல், அநீதியை விலக்குதல், நல்லொழுக்கத்தை வளர்த்தல் இவையே உண்மையான நோன்பின் அறிகுறிகளாகும்.
நாம் நோன்பை வெறும் ஒரு சடங்காக அல்லாமல், உள்ளத்தை மாற்றும் ஆன்மீக பயிற்சியாகக் கடைப்பிடித்தால், ரமழான் நம்மை உண்மையிலேயே மாற்ற போதுமானது.
✍️ அஷ் ஷெய்க் அஸீப் அமீர் (நளீமி)

Comments
Post a Comment