Paper Article - 09
ரமழான் சிந்தனை - 09
நோன்பும் உளஅமைதியும்
2026/03/01
![]() |
| Thinakaran |
ரமழான் மாதம் என்பது வெறும் பசியையும் தாகத்தையும் தாங்கும் காலமல்ல; அது மனதைச் சீரமைக்கும், உள்ளத்தைச் சுத்திகரிக்கும், வாழ்வை ஒழுங்குபடுத்தும் ஆன்மிகப் பயிற்சிக் களமாகும். “நோன்பும் உளஅமைதியும்” என்ற தலைப்பு, இன்றைய நவீனமயமான உலகில் வேகமான வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். மனஅழுத்தம், கவலை, மனச்சோர்வு போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், ரமழான் ஒரு உளஅமைதி தரும் ஔடதமாக விளங்குகிறது.
அல்லாஹுத்தஆலா அல் குர்ஆனில் கூறுகின்றான்: “அல்லாஹ்வை நினைவுகூர்வதினால் இதயங்கள் அமைதி அடைகின்றன” (ஸூரா 13:28). இந்த வசனம், உளஅமைதியின் மையம் அல்லாஹ்வின் நினைவாக இருப்பதை எடுத்துரைக்கிறது. நோன்பு நோற்பவர் தினமும் தொழுகை, துஆ, குர்ஆன் ஓதுதல் ஆகியவற்றில் ஈடுபடுவதால், அவரின் உள்ளம் படிப்படியாக அமைதி அடைகிறது.
மேலும், ரமழான் மாதத்தில் அருளப்பெற்ற மனித வாழ்க்கைக்கான முழுமையான வழிகாட்டியான அல் குர்ஆனை வாசித்து அதன் அர்த்தங்களை சிந்திப்பது மனதுக்கு தெளிவையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. நோன்பு மூலம் உடல் ஓய்வு பெறுவதோடு, மனதும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் திறனைப் பெறுகிறது. கோபம் குறைகிறது, பொறுமை அதிகரிக்கிறது, நன்றியுணர்வு வளர்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நோன்பு ஒரு கேடயமாகும்” (ஹதீஸ்). கேடயம் எவ்வாறு மனிதனை ஆபத்துகளில் இருந்து பாதுகாக்கிறதோ, அதுபோல நோன்பு உள்ளத்தை தீய எண்ணங்களிலிருந்து பாதுகாக்கிறது. இது ஒரு ஆன்மிக பாதுகாப்பு வலயமாக செயல்படுகிறது.
ஆகவே, ரமழான் நோன்பை வெறும் கடமையாக அல்லாமல், உளநல மேம்பாட்டிற்கான வாய்ப்பாகக் காண வேண்டும். ஒவ்வொரு துஆவும், ஒவ்வொரு தொழுகையும், ஒவ்வொரு குர்ஆன் வசனமும் நம்மை உளஅமைதிக்கு சென்றடைய வழி செய்கிறது. ரமழான் நமக்கு வழங்கும் இந்த உளஅமைதியை வருடம் முழுவதும் தக்கவைத்துக் கொள்வதே உண்மையான வெற்றியாகும்.
✍️ அஷ் ஷெய்க் அஸீப் அமீர் (நளீமி)

Comments
Post a Comment